செய்திகள் (Tamil News)

வானூர் அருகே கரும்பு தோட்டத்தில் தீ: ரூ.7 லட்சம் கரும்புகள் எரிந்து சேதம்

Published On 2018-07-14 11:57 GMT   |   Update On 2018-07-14 11:57 GMT
வானூர் அருகே 6 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தோட்டம் தீயில் எரிந்து சாம்பலாகி கிடந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வானூர்:

புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த ஊசுட்டேரி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த நவமால்மருதூர் பகுதியில் 15 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல், கரும்பு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தது. வழக்கம்போல் இன்று காலை தண்டபாணி வயலுக்கு வரும்போது 6 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தோட்டம் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலாகி கிடந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தண்டபாணி கதறி துடித்தார். இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்த கரும்புகள் இப்படி எரிந்து சேதமாகி விட்டதே என நினைத்து மனம் வருந்தினார். சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்த அருகே உள்ள வயல்வெளியில் வேலை பார்த்த விவசாயிகள் ஓடிவந்தனர்.

அவர்கள் தண்டபாணி மீது தண்ணீர் தெளித்ததும் அவருக்கு மயக்கம் தெளிந்தது. பின்னர் இது தொடர்பாக தண்டபாணி கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கரும்பு தோட்டத்துக்கு மர்ம மனிதர்கள் தீ வைத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News