ஒகேனக்கல்லில் நீர்வரத்து 66 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
ஒகேனக்கல்:
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால் கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்பட அணைகள் நிரம்பியது. அதில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
அந்த தண்ணீர் கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு ஒரு லட்சம் கனஅடி அளவில் அதிகரித்து வந்து கொண்டிருந்தது. பின்னர் கர்நாடகாவில் மழை குறைந்ததால் அணைகளில் இருந்து நீர் திறப்பு படிபடியாக குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 50 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து மாலை படிப்படியாக அதிகரித்து 70 ஆயிரம் கனஅடியாக வந்தது. நேற்று காலை சற்று சரிந்து 66 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்றும் நீர்வரத்து 66 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்று கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் இன்று 20-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.