செய்திகள்

முக ஸ்டாலினுடன் கருணாஸ் சந்திப்பு

Published On 2018-10-12 05:22 GMT   |   Update On 2018-10-12 05:22 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் 20 நிமிட நேரம் மு.க.ஸ்டாலினுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். #DMK #MKStalin #Karunas
சென்னை:

முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க. அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அவரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கோர்ட்டில் ஜாமீன் பெற்று கருணாஸ் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

அவரை வேறொரு வழக்கில் கைது செய்வதற்காக நெல்லை போலீசார் சென்னைக்கு வந்து முகாமிட்டு அவரது வீடு தேடி சென்றனர். ஆனால் இதை முன்கூட்டியே அறிந்த கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து விட்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்யாமல் திரும்பி விட்டனர்.

கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து பேசி வந்தனர்.

தற்போது உடல் நலம் சரியாகிவிட்டதால் ஆஸ்பத்திரியில் இருந்து கருணாஸ் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீட்டுக்கு வந்து விட்டார்.

இன்று காலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் 20 நிமிட நேரம் மு.க.ஸ்டாலினுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார்.

பின்னர் வெளியே வந்த கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-


இந்த அரசு என்னை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்கள் கூறுகின்றனர். என்னை மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ இயக்கவில்லை. எனது மனதில் பட்ட கருத்துக்களை நான் கூறிவந்தேன். இதற்காக என்னை பல்வேறு வழக்குகளில் கைது செய்ய போலீசார் முயன்றனர்.

சட்டசபை சபாநாயகர் எந்த பக்கமும் சாயாமல் தராசு முள் போன்று இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதால்தான் அவர் மீது விமர்சனம் எழுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Karunas
Tags:    

Similar News