செய்திகள்
மத்திகிரி அருகே பயங்கரம்- வாலிபர் கொடூர கொலை
மத்திகிரி அருகே முன்விரோத தகராறில் வாலிபரை கொடூரமாக கொலை செய்த 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மத்திகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்திகிரி அருகே உள்ள சிப்பாய் பாளையத்தை சேர்ந்த சபீர்கான் மகன் ஆசீப்கான் (வயது23). நேற்று இரவு 11 மணி அளவில் மத்திகிரியில் இருந்து எடையநல்லூர் செல்லும் வழியில் உள்ள உருதுபள்ளி அருகே ஆசீப்கான் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் அவரை குடல் மற்றும் நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தியது. சரமாரியாகவும் தாக்கினார்கள். இதில் அவரது குடல் வெளியே வந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
கொலை செய்யப்பட்ட ஆசீப்கான் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று உள்ளது. ஏற்கனவே அவருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.