செய்திகள்
போலீஸ் ஏட்டு வெள்ளையன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி

மது குடித்து விட்டு வி‌ஷம் குடித்ததாக நாடகமாடிய போலீஸ் ஏட்டு- பரபரப்பு தகவல்கள்

Published On 2018-11-20 12:01 GMT   |   Update On 2018-11-20 12:01 GMT
விசாரணை நடத்திய அதிகாரிகளை மிரட்டுவதற்காக மது குடித்து விட்டு வி‌ஷம் குடித்ததாக போலீஸ் ஏட்டு நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 40). இவர் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வருகிறார்.

இந்தநிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி வெள்ளையனும் ஓய்வில்லாமல் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளையன், இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டார். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விசாரித்து அறிக்கை தரும்படி எஸ்.பி. அலுவலகத்தில் கூறியதால் விசாரணைக்கு ஆஜராகும் படி இன்ஸ்பெக்டர் கூறினார்.

இதனால் நேற்று காலை போலீஸ் நிலையத்திற்கு வந்த வெள்ளையனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பாதியில் வெளியேறிய அவர் மீண்டும் மாலையில் போலீஸ் நிலையத்திற்கு குடிபோதையில் தள்ளாடியபடி வந்தார்.

அப்போது வி‌ஷம் குடித்து விட்டதாக கூறிய அவர் திடீரென தரையில் விழுந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சையை ஏற்க மறுத்ததால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அதிக அளவில் வெள்ளையன் மது குடித்திருந்ததும் வி‌ஷம் குடித்ததாக நாடகமாடியதும் தெரிய வந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அதிகாரிகளை மிரட்ட வெள்ளையன் வி‌ஷம் குடித்ததாக கூறியது தெரிய வந்தது. இதையடுத்து குடி போதையில் இருந்த அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சங்ககிரி போலீஸ் நிலையத்தில் பணி புரிந்த போது உயர் அதிகாரிகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தலைவாசல் போலீஸ் நிலையத்திற்கு வெள்ளையன் மாற்றப்பட்டார். தற்போதும் அங்கும் அவர் உயர் அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டதால் சஸ்பெண்டு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News