திருமங்கலம் அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை கொல்ல முயற்சி - ரவுடி கைது
பேரையூர்:
மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ரவுடியாக வலம் வந்தவர் டாக் ரவி என்ற ரவிக்குமார் (வயது 47). இவர் மதுரை எல்லீஸ் நகரில் குடியிருந்து வருகிறார்.
இவர் மீது முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, வரிச்சியூர் செல்வத்தின் தம்பி இளங்கோ கொலை வழக்கு உள்ளிட்ட 4 கொலை வழக்குகள் உள்பட 24 வழக்குகள் உள்ளன.
2014-ம் ஆண்டுக்கு பின் இவர் மீது வழக்கு எதுவும் பதிவாகவில்லை. தற்போது 2 வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் திருமங்கலம் அருகேயுள்ள எர்ர மலம்பட்டியைச் சேர்ந்த பீட்ராமன் (45) என்பவரிடம் டாக் ரவி என்ற ரவிக்குமார் ரூ.1 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளம் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்கு டாக் ரவி வந்ததாகவும், அப்போது பிட்ராமன் தான் கொடுத்த 1 லட்ச ரூபாய் பணத்தை கேட்டதற்கு டாக் ரவி ஆபாசமாக பேசியதோடு, காலி பீர் பாட்டிலை எடுத்து கொலை செய்யும் நோக்கத்துடன் அவரை குத்த முயன்றதாக தெரிகிறது.
பின்னர் ராமனின் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி ராக் ரவி கைது செய்யப்பட்டார். திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.