சென்னையில் ‘ஹைடெக்’ விபசார புரோக்கர் பூங்கா வெங்கடேசன் கைது
சென்னை:
சென்னையில் விபசார தொழில் ஹைடெக் தொழில் நுட்பத்தை புகுத்தி அசத்தும் கில்லாடி புரோக்கர் பூங்கா வெங்கடேசன் (43).
தென்சென்னையில் 60-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களை நடத்தி வருகிறார். விபசார தொழிலை வெளிப்படையாக தெரியாமல் இருப்பதற்காக இவர் தேர்ந்தெடுத்து இருப்பது சமூக வலைத்தளங்கள். மென் பொறியாளர்களை குறிவைத்து இந்த வலைத் தளங்கள் மூலம் தனது விபசார தொழில் ஹை டெக் ஆக நடத்தி வருகிறார்.
இந்த தளங்கள் மூலம் பெண்களின் விபரம் உள்ளிட்ட தகவல்களை அறிந்து ஆன்-லைனில் பதிவு செய்துகொள்ள முடியும். ஓட்டல், அறை எண், நேரம் எல்லாவற்றையும் ஆன்லைனில் பதிவு செய்து பணத்தையும் செலுத்திவிட வேண்டியதுதான்.
பூங்கா வெங்கடேசனின் வங்கி கணக்குக்கு பணம் சென்றுவிடும். சம்பந்தப்பட்ட பெண்களுக்கும் அவர்களது வங்கி கணக்குக்கு வெங்கடேசன் பணத்தை அனுப்பி வைப்பார். விபச்சாரத்திலும் அவர் கையாளும் டிஜிட்டல் தொழில்நுட்பம் அவருக்கு கை கொடுத்தது.
ஏற்கனவே பலமுறை போலீசில் சிக்கிய வெங்கடேசன் தொழிலை மட்டும் விடாமல் புதுபுது முறையில் விரிவு படுத்தியே வந்தார். இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் திட்ட மிட்டனர். இதை மோப்பம் பிடித்த வெங்கடேசன் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார். அந்த மனு கடந்த மாதம் தள்ளுபடி ஆனது.
இதையடுத்து விபசார பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் மகேஸ்வரி தலைமையிலான போலீஸ் படையினர் அவரை பிடிக்க தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் ஆந்திராவில் தலைமறைவாக இருந்தார்.
அவரது இருப்பிடத்தை கண்காணித்து வந்த போலீசார் பூங்கா வெங்கடேசனையும், அவரது கூட்டாளியான சம்பத்குமார்(22) என்பவரையும் கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.