செய்திகள்

தி.மு.கவுடன் கூட்டணி: காங்கிரஸ் தொகுதிகள் விரைவில் உறுதியாகும் - திருநாவுக்கரசர்

Published On 2019-01-27 07:06 GMT   |   Update On 2019-01-27 07:06 GMT
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் விரைவில் உறுதியாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar

திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே கும்மனூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மோடி அரசு கடந்த நான்கரை ஆண்டு காலம் தூங்கி விட்டு தற்போது புதிய திட்டங்களை செயல்படுத்துவது முழுமையாக நிறைவேறாது. இது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம். அதை மோடியும் தற்போது செய்து வருகிறார்.

ரூ.3.50லட்சம் கோடி முதலீடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் வந்ததாக கூறியதால் நீதிமன்றத்துக்கே சந்தேகம் வந்துள்ளது. இதனால்தான் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க கோர்ட்டு கூறியிருக்கிறது.

தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுகிறது, அவமானம் படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு சவால் விடும் வகையில் கோவணத்துடன் விவசாயிகள் உருவத்தை குடியரசு தினவிழாவில் கொண்டுவந்து கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாடு மக்கள் சார்பாக இதனை கண்டிக்கிறேன்.

தமிழ்நாட்டிற்கு வெள்ளம் புயல் பாதிப்பு காலங்களில் மத்திய அரசு முறையாக நிவாரணங்கள் வழங்கவில்லை.

தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. யார் யாருக்கு என்ன தொகுதி என்பது குறித்து விரைவில் பின்னர் உறுதி செய்யப்படும்.

அரசு ஊழியர் போராட்டத்தை அச்சுறுத்தி பயமுறுத்தி ஒடுக்க கூடாது. அவர்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

காங்கிரசின் சக்தி அமைப்பில் 10 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar

Tags:    

Similar News