அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் இந்த வாரம் சென்னை திரும்புகிறார்
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் அவர் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக குழு ஒன்றை அமைத்துள்ளார்.
எல்.கே. சுதீஷ் தலைமையில் மாநில நிர்வாகிகள் டாக்டர் இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, திருப்பூர் அக்பர் ஆகியோர் குழுவில் இடம் பெற்று உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த விஜயகாந்த் வருகைக்காக காத்து இருக்கிறார்கள்.
கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில்தான் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கப்படும் என்று திட்டவட்டமாக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இந்த வாரம் சென்னை திரும்புகிறார். விஜயகாந்த் உடல் நலம் தேறி புதிய உத்வேகத்துடன் அரசியலில் மீண்டும் வலம் வருவார் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் ஒரு வலுவான சக்தியாக இருந்துள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கணிசமான இடங்களில் போட்டியிடவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
2 இலக்க அளவில்தான் தேர்தலில் நிற்போம், கேப்டன் விஜயகாந்திற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. எங்களது கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
தே.மு.தி.க.வில் ஏற்பட்டுள்ள தொய்வை சரி செய்ய விஜயகாந்த் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதால் அவரை மீண்டும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
தே.மு.தி.க.வை இழுக்க அ.தி.மு.க. முயற்சி செய்கிறது. இந்த கூட்டணி உறுதியானால் இதுவும் தி.மு.க.வுக்கு நிகரான மெகா கூட்டணியாக அமையும். #vijayakanth #dmdk