மண்ணடியில் 18 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை:
சென்னை மண்ணடி மூர் தெருவில் எலக்ட்ரானிக் பொருட்கள் குடோனில் கடத்தல் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று காலையில் அதிகாரிகள் குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. அதனை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடத்தல் தங்கத்தை மண்ணடி குடோனுக்கு கொண்டு வந்து பதுக்கியதில் சுங்கத்துறை அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக 11 பேரிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் முடிவில் தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்கு துணை போனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.