செய்திகள் (Tamil News)

பாராளுமன்ற தேர்தலில் அமமுக 25 இடங்களை கைப்பற்றும் - புகழேந்தி

Published On 2019-02-26 04:57 GMT   |   Update On 2019-02-26 04:57 GMT
பாராளுமன்ற தேர்தலில் அமமுக 25 இடங்களை கைப்பற்றும் என கர்நாடகா மாநில அமமுக செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார். #Parliamentelection #Pugazhendhi

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூரில் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் தர்மர் தலைமையிலும், மாவட்ட அவைத்தலைவர் ஹரிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் பத்மநாதன் (கடலாடி), முத்துராமலிங்கம் (கமுதி வடக்கு), ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன் (மண்டபம்) ஆகியோரது முன்னிலையிலும் நடந்தது. நகர செயலாளர் காட்டுராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் கர்நாடகா மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி பேசியதாவது:-

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என கூறிய ராமதாசும், அன்புமணியும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, சுயலாபமடைந்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதற்கும், கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கும், பா.ஜனதா அரசு என்ன செய்தது. தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் அநீதிகளை இழைத்த அரசு மோடி தலைமையிலான அரசு.

 


அ.தி.மு.க.வில் வருமானமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். ஆனால் அ.ம.மு.க.வில் கடைமட்ட தொண்டர்கள் கூட தனது டூவீலரை அடகு வைத்து, கட்சி பணியாற்றுகிறார்கள். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது.

பா.ஜனதா அரசில் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டே வருகிறது. இந்தியாவிலேயே குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கியது ஜெயலலிதா தலைமையிலான அரசு மட்டுமே.

வரும் லோக்சபா தேர்தலில் அ.ம.மு.க. 25 சீட்டுகளை பிடித்து வெற்றி பெறும் என உளவுத்துறையினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதால், ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு பயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். #Parliamentelection #Pugazhendhi

Tags:    

Similar News