மாதவரம் - சிறுசேரிக்கு டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயில் இயங்கும்
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரிக்கு 118 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தட பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது.
மாதவரம்-சிறுசேரி வழித்தட பாதை பணிகள் முடிந்ததும் அங்கு டிரைவர் இல்லாமல் தானியங்கி வசதி மூலம் மெட்ரோ ரெயில் ஓடும்.
இதற்காக ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் 16 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டறை மூலம் கண்காணிக்கப்பட்டு இயக்கப்படும்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாதவரம்-சிறுசேரி வழித்தட பாதையில் இன்னும் 6 ஆண்டுகளுக்கு பிறகு டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயில் ஓடும் அதிநவீன சாப்ட்வேர், சிக்னல் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
மாதவரம்-சிறுசேரி வழித்தடத்தில் 2025-ம் ஆண்டு முதல் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயில் ஓடும் 254 நவீன மெட்ரோ ரெயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த வழித்தடபாதையில் தினசரி 45 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள். பயணிகள், பொதுமக்களுக்கு இந்த மெட்ரோ ரெயில் புதுமையான அனுபவத்தைத் தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.