செய்திகள்
திருத்தணியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
திருத்தணியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மகாவிஷ்ணு நகர் பகுதியில் வசித்து வருபவர் சைலஜா. நேற்று முன்தினம் இரவு இவரும் இவரது மகளும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டு பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு விழித்தெழுந்த சைலஜா மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி செய்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் எதிர் வீட்டில் இருக்கும் நண்பருக்கு போன் செய்து ‘திருடன்’ வந்திருப்பதாக கூறி கூச்சலிட்டார்.
இதைக்கேட்டு மர்ம ஆசாமி அங்கிருந்து ஓடிவிட்டான். அதே போல், பக்கத்து தெருவில் வசித்து வருபவர் ராதா. இவர் மூன்று தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி கொண்டு தனது சகோதரி ரமணி வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் மர்ம ஆசாமி பூட்டியிருந்த ராதாவின் வீட்டு பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்று, கடப்பாரையால் பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் தங்க தாலி மற்றும் ரூ.50 ஆயிரத்தை அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச்சென்றான். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.