உள்ளூர் செய்திகள் (District)
ஈரோட்டில் 3 நாட்களுக்கு பிறகு கோவில்களில் சாமி தரிசனம் செய்த பொதுமக்கள்
ஈரோட்டில் 3 நாட்களுக்கு பிறகு இன்று கோவில்களில் பொதுமக்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் 3 நாட்களுக்கு பிறகு இன்று கோவில்களில் பொதுமக்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் கோவில்களில் சென்று வழிபட பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நாட்களில் வழக்கமாக கோவில்களில் நடைபெறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பொதுமக்கள் நேரடியாக சென்று வழிபட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
இருந்தாலும் பொதுமக்கள் கோவிலின் வெளியே நின்று சாமி கும்பிட்டு சென்றனர். இந்நிலையில் மூன்று நாட்கள் தடைகளுக்குப் பிறகு இன்று வழக்கம்போல் கோவில்கள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் வழிபடவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் பொதுமக்கள் கோவில்களில் சென்று சாமிதரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சென்னிமலை முருகன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், கோபி பச்சைமலை பவளமலை கோவில், கொண்டத்து காளியம்மன் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கோட்டை பெருமாள், ஈஸ்வரன் கோவில்களில் இன்று காலை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.