உள்ளூர் செய்திகள் (District)
குடியாத்தத்தில் முதியவரை ஏமாற்றி பணம் பறித்து கொண்டு ஓடிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த சேத்துவண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் (வயது 75) நாடகாசிரியர் இவரது மனைவி பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ஜெகன்நாதன் தனியாக வசித்து வருகிறார்.
அவர் சிறுக சிறுக சேர்த்த பணம் ரூ.9,500 மற்றும் சில்லரை நோட்டுக்கள் என 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக ஒரு பையில் வைத்துக்கொண்டு சுற்றி வந்துள்ளார்.
குடியாத்தத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தினந்தோறும் சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
நேற்று காலையில் ஜெகன்நாதன் அம்மா உணவகத்திற்கு சாப்பிட வந்தார். அங்கு சாப்பிடும்போது பக்கத்தில் ஒரு பெண் அவரிடம் பேச்சு கொடுத்தபடியே இருந்துள்ளார். அதன் பின்னர் கைகழுவ வெளியே வந்த ஜெகன்நாதன் அங்கே இருந்த டேபிள் மீது பையை வைத்துவிட்டு கைகழுவி யுள்ளார்.
அந்த சமயம் பார்த்து அருகே இருந்த பெண் பையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். அதற்குள் அந்த பெண் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் ஜெகன்நாதன் பணம் பறிபோய்விட்டதே என்று கண்ணீர் விட்டு அழுது புலம்பினார்.
அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் முதியவரை அழைத்துக்கொண்டு குடியாத்தம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து டவுன் போலீசார் அம்மா உணவகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.