உள்ளூர் செய்திகள் (District)
2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாணவ -மாணவியர் உற்சாகத்துடன் வந்தனர்
ஈரோடு மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் பள்ளி திறக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் பள்ளி திறக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வு களும் நடத்தப்பட்டது.
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.
ஆனால் நர்சரி, மழலையர் பள்ளிகள் மட்டும் திறக்க கடந்த 2 ஆண்டுகளாக அனுமதிக்கப்பட வில்லை. பல்வேறு தடுப்பு நட வடிக்கை காரணமாக தமிழ கத்தில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் நர்சரி, மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து திறந்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நர்சரி, மழலையர் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கடந்த சில நாட்களாக பள்ளிகளில் தூய்மை பணி நடந்தது. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 101 அரசு மற்றும் தனியார் நர்சரி, மழலையர் பள்ளிகள் உள்ளன. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப் பறைகள் சுத்தப்படுத்தி, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இதில், மாவட்டத்தில் எல்.கே.ஜி.,வகுப்பில் 1,442 மாணவ-மாணவிகளும், யு.கே.ஜி., வகுப்பில் 1,908 மாணவ- மாணவிகளும் நடப் பாண்டில் சேர்க்கை நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை கிட்டத்தட்ட 2 வருடங்களுக்குப் பிறகு நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்கப் பட்டன. மாணவ மாணவிகள் பெற்றோருடன் வந்திருந்தனர். மாணவர்களுக்கு பள்ளி நுழைவு வாயில் பகுதியில் கையில் கிருமி நாசினி தெளித்து பட்டது.
அவர்களது உடல் வெப்ப நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப் பட்டது. சில மாணவ -மாணவிகள் வகுப்பறைக்கு செல்ல அடம் பிடித்தனர். சில பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர் கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கொரோனா பாது காப்பு வழிகாட்டி நெறி முறைகளுடன் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.