உள்ளூர் செய்திகள் (District)
நெல்லையில் வாக்குச்சாவடிக்குள் சென்ற பா.ஜனதா வேட்பாளர்-தி.மு.க.வினர் வாக்குவாதம்
நெல்லை மாநகராட்சி 12-வது வார்டுக்குட்பட்ட ரெங்கநாதன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பா.ஜனதா-தி.மு.க. வேட்பாளருக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி 12-வது வார்டுக்குட்பட்ட ரெங்கநாதன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பா.ஜனதா வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் உள்ளே சென்று வெகுநேரம் இருப்பதாக புகார் எழுந்தது.
இதனையறிந்த தி.மு.க. வேட்பாளரின் கணவர் சம்பவ இடத்திற்கு சென்று வாக்குச்சாவடி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறும் போது, வேட்பாளர்களின் ஏஜெண்டுகளை மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க வேண்டும். ஆனால் பா.ஜனதா வேட்பாளரை வெகுநேரம் உள்ளே அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பா.ஜனதா வேட்பாளர் கூறும்போது வாக்குப்பதிவு நிலவரத்தை அறிவதற்காக வந்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரை அங்கிருந்து அதிகாரிகள் வெளியேற்றினர்.
தொடர்ந்து தி.மு.க.வினரும் அங்கிருந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.