உள்ளூர் செய்திகள் (District)
கோப்பு படம்

கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2022-02-19 09:56 GMT   |   Update On 2022-02-19 09:56 GMT
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை கணபதி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஆர்த்தி (வயது 19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2&ம் ஆண்டு படித்து வந்தார். 

அப்போது மாணவிக்கு அதே வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் அக்காவிற்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தனது தங்கையை கண்டித்தார். மேலும் மாணவருடனான காதலை கைவிட்டு விட்டு படிக்கிற வேலையை மட்டும் பார் என எச்சரித்தார். 

இதன் காரணமாக மாணவி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததால் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று இருந்த மாணவியின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பினர். 

அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தங்களது மகள் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Similar News