விருத்தாசலத்தில் கள்ள ஓட்டு போட முயன்ற வாலிபர் கைது
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள வடக்கு கோட்டை வீதி அரசு உதவி பெறும் பள்ளியில் 24-வது வார்டு வாக்காளர்களுக்கு வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த வாக்கு சாவடி மையத்தில் நேற்று மாலை 4 மணிக்கு கணேசன் என்ற பெயரில் வாலிபர் ஒருவர் வாக்கு பதிவு செய்ய பூத் சிலிப்புடன் வந்தார். இந்த வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் விருத்தாசலம் 14-வது வார்டு பழமலைநாதர் நகரை சேர்ந்த ஜீவா (வயது 23) என்பதும், இவர் ஏற்கனவே இறந்த விருததம்பிகை நகரை சேர்ந்த கணேசனின் பெயரில் வாக்கு பதிவு செய்ய வந்திருப்பதும் தெரியவந்தது. உடனே இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜீவா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்தால் அந்த வாக்கு சாவடி மையத்தில் 30 நிமிடங்கள் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.