உள்ளூர் செய்திகள் (District)
ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்தார்
கோவை:
கோவை பேரூர் ஆறுமுக கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் அப்பு என்கிற விக்னேஷ் (வயது 26). தங்க நகைத் தொழிலாளி. இந்தநிலையில் இவரது அண்ணன் மணிகண்டனுக்கும் அவரது மனைவி புஷ்பலதா என்பவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது விக்னேஷ் தனது அண்ணியை சமாதானப்படுத்தினார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு ஆழியார் பொங்கலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
அங்கு அண்ணியை விட்டுவிட்டு விக்னேஷ் அங்கேயே தங்கினார். அப்போது விக்னேஷ் அருகில் உள்ள ஆழியார் ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விக்னேஷ் ஆழமான பகுதிக்கு சென்றார்.
இதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆழியார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.