கடலூரில் ஆட்டோ- ஷேர் ஆட்டோக்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஹாரன்கள் பறிமுதல்
கடலூர்:
கடலூர் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாள் முழுவதும் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் சென்று செல்லும்போது, அரசு அனுமதி இன்றி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன் பயன்படுத்தி செல்வதால் வாகனங்களில் செல்லக் கூடியவர்களும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இதன் காரணமாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் எழுந்தன.
இதையடுத்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்றவற்றை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அரசு அனுமதியின்றி அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹாரன் பயன்படுத்தியது தெரியவந்தது. பின்னர் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்து ஆட்டோ டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வருங்காலங்களில் இந்த ஹாரன்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.