உள்ளூர் செய்திகள் (District)
செங்கத்தில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரிப்பு
செங்கத்தில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரிப்பை தடுக்க அதிகாரிகள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
செங்கம்:
செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
செங்கம் பேரூராட்சி, புதுப்பாளையம் பேரூராட்சி உள்பட செங்கம் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
செங்கம் மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசு தடை செய்துள்ள பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தி பார்சல் செய்து தரப்படுகிறது.
மேலும் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் சாலைகளிலும், கால்வாய்களிலும், குப்பை கழிவுகளும் போடப்படுவதால் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் கால்வாய்களில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பை கழிவுகளில் போடப்படும் பிளாஸ்டிக் கவர்களை கால்நடைகள் தின்று ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகிறது.
கிராமப்பகுதிகளில் பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது விவசாய நிலங்களை பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தி தடுக்கவும் கை பைகளை பயன்படுத்த தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொது-மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.