உள்ளூர் செய்திகள் (District)
களியக்காவிளை வாலிபர் கொலையில் மேலும் 2 பேர் சரண்
களியக்காவிளை வாலிபர் கொலையில் மேலும் 2 பேர் சரண் அடைந்தனர்.
நாகர்கோவில்:
களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் பகுதியைச் சேர்ந்தவர் ஷிஜி, (வயது 41), ஆட்டோ டிரைவர். மங்காடு பனமுகம் பகுதியை சேர்ந்தவர் அஜின் (26). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி குளப்புறம் அன்னிகரை பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கியதுடன் அரிவாளால் வெட்டியது.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது ரேஷன் அரிசி கடத்தல் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் இருவர் மீதும் தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஷிஜி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். டி.எஸ்.பி. கணேசன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஜஸ்டின் ஜோசப், மகேந்திர குமார், கிளாம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் மின்னச்சலையைச் சேர்ந்த வினு, நாகர்கோவில் கோர்ட்டில் சரணடைந்தார்.
மேலும் காப்பி காடு பகுதியைச் சேர்ந்த ஷிபு களியக்காவிளை போலீசில் சரணடைந்தார். கோர்ட்டில் சரணடைந்த வினுவை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். போலீசில் சரணடைந்த ஷிபுவிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.