உள்ளூர் செய்திகள் (District)
நண்பருடன் மீன் பிடித்து கொண்டிருந்த கட்டிட தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி
சித்தோடு அருகே நண்பருடன் மீன் பிடித்து கொண்டிருந்த கட்டிட தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு அருகே நண்பருடன் மீன் பிடித்து கொண்டிருந்த கட்டிட தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி, அக்ரஹாரம், புள்ளக்கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கட்டிட கூலித் தொழிலாளிகள்.
செல்வராஜ் தற்போது ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டில் நடந்து வரும் அத்திக்கடவு அவினாசி திட்டம் பணியில் கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வராஜ் கிளம்பிச் சென்றார். அங்கு வேலை இல்லாததால் தனது நண்பர் சந்திரன் என்பவருடன் பவானி ஆற்றில் மீன் பிடிக்க சென்றனர்.
சிறிது நேரத்தில் சந்திரன் வீட்டிற்கு போய் விட்டு வருவதாக கூறிவிட்டு சென்று விட்டார். பின்னர் சந்திரன் திரும்பி வந்தபோது செல்வராஜை காணவில்லை. இது குறித்து சந்திரன் செல்வராஜ் மனைவி பூங்கொடிக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பூங்கொடி தனது உறவினர்களுடன் பவானி ஆற்றுக்கு வந்தார்.
மேலும் இது குறித்து பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேடிய போது பவானி ஆற்று பகுதியில் செல்வராஜ் உடல் மிதந்து வந்ததை கண்டு பிடித்தனர். செல்வராஜ் மீன்பிடித்த போது ஆழமான பகுதிக்கு சென்று தவறி தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்தது.
சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.