உள்ளூர் செய்திகள் (District)
தடப்பாளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பவானிசாகர் அணையில் இருந்து தடப்பாளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து தடப்பாளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணை–யின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.77 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று வரை தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாச–னத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 155 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.