உள்ளூர் செய்திகள் (District)
ஓட்டை உடைசல் பஸ்களால் குழந்தைகளுக்கு ஆபத்து
மதுரையில் ஓடும் ஓட்டை உடைசல் பஸ்களால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை
மதுரை பெரியார் பஸ் நிலையம்-மேலூர் இடையே ஓடும் அரசு பஸ்சின் (TN-58 N1654) உள்பகுதியில் “நடுவுல கொஞ்சம் தகரத்தை காணோம்” என்ற கதையாக சிறிய ஓட்டை உள்ளது. இதன் வழியாக பார்த்தால் பின் சக்கரம் சுற்றுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
இது குறித்து ஓட்டுநரும், நடத்துநரும் பஸ் நிலைய கிளைகளில் புகார் கொடுத்த தாக தெரியவில்லை. சென்னையில் பள்ளி மாணவி சுருதி பஸ் ஓட்டை வழியாக கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் நடந்தது. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அதேபோன்ற சம்பவம் மதுரையில் நடக்கும் முன்பு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரையில் ஓடும் பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள், குறிப்பாக பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் ஓட்டை, உடைசலுடன் காணப்படுகிறது. இதை போக்குவரத்து கழக நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றும் பெண் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.