வங்கியில் ரூ.3 கோடி மோசடி புகார்- 6 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
- புகார் மனு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
- ஏ.ஜி.கே. பேக்கர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.3 கோடி அளவில் கடன் வாங்கப்பட்டதாகவும், அதனை சொந்த உபயோகத்துக்காக சிலர் பயன்படுத்தி கொண்டதாகவும், கடனை முறையாக செலுத்தவில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இந்த புகார் மனு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஏ.ஜி.கே. பேக்கர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர்கள் குமாரராஜா, அவரது சகோதரர் அசோகன் மற்றும் ஆனந்தன், ராமச்சந்திரன், மணிசங்கர், சீனிவாசன் ஆகிய 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு, சென்னையில் சி.பி.ஐ. தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் அபராதத்துடன் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஏ.ஜி.கே. பேக்கர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
மேற்கண்ட தகவல் சி.பி.ஐ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.