டவுனில் பொதுமக்களை அச்சுறுத்திய 31 தெருநாய்களை வலைவிரித்து பிடித்தனர்
- டவுன் பகுதிகளில் பொது மக்களுக்கு இடை யூறாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.
- டவுன் 16-வது வார்டுக்கு உட்பட்ட சாலியர் தெரு,நல்ல முத்தம்மன் கோவில் தெரு, மற்றும் கண்டியப்பேரி உழவர் சந்தை மற்றும் அதன் சுற்று வட்டார தெருக்களில் சுற்றித்திரிந்த 31 நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் உதவியோடு வலை விரித்து பிடித்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட டவுன் பகுதிகளில் பொது மக்களுக்கு இடை யூறாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.
இதனையடுத்து சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தர விட்டார்.
அதன்பேரில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் மாநகர நல அலுவலர் சரோஜா, நெல்லை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் வழிகாட்டுதலின் கீழ் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் ஊழியர்கள் முருகன், பாலமுருகன் பணியாளர்கள் திவாகர், மணிகண்டன் ஆகியோர் டவுன் பகுதிகளில் திரியும் தெரு நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாநகர பகுதிகளில் தெருநாய்கள் தொந்தரவு குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து டவுன் 16-வது வார்டுக்கு உட்பட்ட சாலியர் தெரு,நல்ல முத்தம்மன் கோவில் தெரு, அக்கசாலை விநாயகர் கோவில் தெரு, கருவேலங்குன்று தெரு, குற்றாலம் ரோடு, லாலுகாபுரம் மற்றும் கண்டியப்பேரி உழவர் சந்தை மற்றும் அதன் சுற்று வட்டார தெருக்களில் சுற்றித்திரிந்த 31 நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் உதவியோடு வலை விரித்து பிடித்தனர்.