புவனகிரி அருகே 400 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே முத்துகிருஷ்ணாபுரம், பு. சித்தேரி, மேல மணக்குடி, தெற்குத்திட்டை, வடக்குத்திட்டை, புதுவராயன் பேட்டை ஆகிய கிராமங்களில் மழைநீரில் மூழ்கி சுமார் 400 ஏக்கருக்கு மேல் தண்ணீரில் மூழ்கி பயிர் முழுவதும் சேதமானது.புவனகிரி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இரவு முழுதும் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. அது மட்டுமின்றி முரட்டு வாய்க்கால் எனப்படும் பாசன வடிகால் வாய்க்கால் மற்றும் பெரும்பாலான பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால் வழியாக வயலில் இருக்கும் நீர் மழை காலங்களில் வடிவது வழக்கம். இந்த வடிகால் கால்வாயில் சில ஆண்டுகளாகவே சரியாக தூர் வராமல் மழைக்காலங்களில் கால்வாய் தண்ணீர் நிரம்பி சம்பா பயிர் செய்த வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சரியான வடிகால் வசதி இல்லாததால் நீர் வடிவதற்கு சில காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் புவனகிரி அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரம், பு. சித்தேரி, மேல மணக்குடி, தெற்கு திட்டை, வடக்கு திட்ர்டை, புதுவராயன் பேட்டை ஆகிய கிராமங்களில் சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். முரட்டு வாய்க்கால் வடிகால் வாய்க்கால் மற்றும் பெரும்பாலான பாசன வடிகால் வாய்க்கால் முழுவதும் சம்பு, ஆகாயத்தாமரை பரவியிருப்பதால் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டுகள் முன் வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசு இழப்பீடு தரம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.