உள்ளூர் செய்திகள் (District)

அரூர் அருகே 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் தமிழ் ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.  

அரூர் அருகே 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் தமிழ் ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் -வெகு விமர்சையாக நடைபெற்றது

Published On 2022-11-21 09:39 GMT   |   Update On 2022-11-21 09:39 GMT
  • சிவன் கோயிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • திருப்பணிகள் முடிவுற்று, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த புத்தூர் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பல ஆண்டுகளாக புணரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான இந்த சிவன் கோயிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த கோயில் திருப்பணிகள் முடிவுற்று, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு கார்த்திகை, ரோகிணி, சந்திரனுக்கு சிறப்பு பூஜை செய்து, முளைப்பாரிகள் எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாமிகளுக்கு காப்பு அணிவிக்கப்பட்டு திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து கோவில் கோபுரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பொதுமக்கள் மீது சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மேலும் இந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி, திருப்புகழ் உள்ளிட்ட அனைத்து மந்திரங்களும் தமிழில் ஓதப்பட்டு, தமிழ் ஆகம விதிப்படி நடைபெற்றது. இதனை அடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News