மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கிய கலெக்டர்
- கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், இடம் பிரச்சனை மற்றும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை, விதவை மகள் திருமண உதவி திட்டம், மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
மொத்தம் 312 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு காண மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது, 3 சக்கர சைக்கிள் கேட்டு மாற்றுத்திறனாளி வெங்கடாசலம் என்பவர் மனு அளித்தார். அந்த மனுவை பரிசீலித்த கலெக்டர் அப்போதே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.9,050/- மதிப்பிலான 3 சக்கர வண்டியினை வழங்க உத்தரவிட்டார்.
மாவட்ட கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, 3 சக்கர சைக்கிள் கொண்டு வரப்பட்டு அந்த இடத்திலேயே அவருக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.