சேலம் அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
- சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியில் கரும்பு தோட்டத்தில் இருந்த மீதி சருகுகள், சுள்ளிகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
- அதில் பற்றி எரிந்த தீ , அருகே இருந்த அறுவடை செய்யப்படாத கரும்பு தோட்டத்தில் வேகமாக பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ் ( வயது 62). விவசாயி. இவரது வீட்டின் அருகே இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று கரும்புகளை அறுவடை செய்த பிறகு, தோட்டத்தில் இருந்த மீதி சருகுகள், சுள்ளிகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. அதில் பற்றி எரிந்த தீ , அருகே இருந்த அறுவடை செய்யப்படாத கரும்பு தோட்டத்தில் வேகமாக பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.