2 பெண்களை பீர் பாட்டிலால் குத்திய நபர் கைது
- அரிகிருஷ்ணன் மற்றும் வைத்தியநாதன் ஆகியோருக்கிடையே நிலப்பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்தது.
- வைத்தியநாதன் மனைவி மற்றும் மகளை பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தினார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த ஆத்திரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அரிகிருஷ்ணன். சொக்கலிங்கம் மகன் வைத்தியநாதன். இருவரும் உறவினர்கள். இவர்களுக்குள் நிலப் பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வருகிறது.நேற்று இரவு அரிகிருஷ்ணன் குடிபோதையில் வைத்தியநாதன் வீட்டில் இல்லாதபோது அவரைப்பற்றி அசிங்கமாக திட்டிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை தட்டிக்கேட்ட வைத்தியநாதன் மனைவி மற்றும் மகளை பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தினார்.
இதில் வைத்தியநாதன் மனைவி சண்முகவள்ளிக்கு முதுகு, தலை, இடுப்பு ஆகிய இடங்களில் பாட்டில் குத்து விழுந்தது. வைத்தியநாதன் மகள் சண்முகப்பிரியாவின் முதுகில் சரமாரியாக பாட்டிலால் குத்தினார்.
படுகாயம் அடைந்த இருவரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்னகாரன்குப்பம் அரிகிருஷ்ணனை (36) கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.