ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து பராமரிக்க விரும்பும் பெற்றோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
- விருப்ப முடைய பெற்றோர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- நேரிலோ அல்லது 04343-292567 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
மிஷன் வட்சாலயா திட்டத்தின் படி இளைஞர் நீதி சட்டம் 2015ன் கீழ் பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்களில் 6 முதல் 18 வயதிற்குட்பட்ட தத்துக்கொடுப்பதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருக்கக்கூடிய குழந்தைகள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் குழந்தைகள் இல்லங்களில் தங்கும் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் கண்டறியப்பட்டு, அக்குழந்தைகள் குடும்ப சூழலில் வளர்வதற்கு ஏற்றவாறு நல்ல சூழலை உருவாக்கி குழந்தைகளை வளர்த்து பராமரிப்பதற்கு விருப்ப முடைய பெற்றோர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் என்பவர், சொந்த குழந்தைகள் இருந்தோ அல்லது தத்து எடுப்பதற்கு உரிய தகுதிகள் இருந்து தத்தெடுப்பிற்கு பதிவு செய்து காத்திருப்போர்களாக இருப்பவர்கள் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் என்ற வரையறையில் உரிய நடைமுறைகளை பின்பற்றி வளர்ப்பு பராமரிப்பில் குழந்தைகளை வளர்க்கலாம். வளர்ப்பு பராமரிப்பு காலங்களில் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மிகாமல் உள்ளோர் மிஷன் வட்சாலயா திட்டத்தின் மூலம் நிதி உதவி தேவைப்படுமு வளர்ப்பு பராமரிப்பு பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் இருக்கும் குழந்தைகள் குறுகிய காலம் அல்லது நீண்ட காலம் அல்லது குழந்தையின் 18 வயது முடியும் வரை வளர்ப்பு பராமரிப்பு பெற்றோருடன் இருக்க அனுமதி வழங்கப்படும். வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் என்ற வகையில் பராமரிப்பு செய்ய தயார் நிலையில் உள்ளவர்கள் விண்ணப்பம், நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த விவரங்களை கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், மாவட்ட மைய நூலகம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் அறை எண்.8 மற்றும் 10ல் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04343-292567 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.