உள்ளூர் செய்திகள்

உடையார்பாளையம் அருகே இளம்பெண்ணை கொன்று சாலையோரம் உடல் வீச்சு?

Published On 2023-05-31 06:51 GMT   |   Update On 2023-05-31 06:51 GMT
  • மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
  • அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது வேறு பகுதியில் கொலை செய்துவிட்டு, அதனை மறைப்பதற்காக இங்கு வந்து வீசிவிட்டு சென்றார்களா? என புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கீழவெளி பகுதி சாலையோரத்தில் இன்று காலை உடல் முழுவதும் காயங்களுடன் இளம்பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அவர் சுடிதார் அணிந்திருந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுபற்றி உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த பெண் யார், உள்ளூரை சேர்ந்தவரா, எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இளம்பெண் யாராவது மாயமாகி இருககிறார்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது வேறு பகுதியில் கொலை செய்துவிட்டு, அதனை மறைப்பதற்காக இங்கு வந்து வீசிவிட்டு சென்றார்களா? என புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவம் உடையார்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News