உள்ளூர் செய்திகள்

அரியலூர் அருகே போக்சோ வழக்கில் வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை

Published On 2023-02-23 08:25 GMT   |   Update On 2023-02-23 08:25 GMT
  • அரியலூர் அருகே போக்சோ வழக்கில் வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது
  • ரூ.1லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த மேலநெடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார் மகன் விஜயகுமார்(வயது25). இவர், அதே கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்த 18 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதையடுத்து 2020ம் ஆண்டு சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் பெண்ணை கடத்தியது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக விஜயகுமாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து விஜயகுமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.

Tags:    

Similar News