உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே தாய்-மகன் மீது தாக்குதல் -சகோதரிகள் உட்பட 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2022-10-17 08:42 GMT   |   Update On 2022-10-17 08:42 GMT
  • முத்துப்பாண்டி குடும்பத்தினருக்கும், வேல்ராணிக்கும் தகராறு இருந்து வருகிறது.
  • சரவணன், ராஜம்மாள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சீவலப்பேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் அப்பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். இவரது வீட்டு முன்புள்ள பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த மணி மகள் வேல்ராணிக்கும் தகராறு இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் இது சம்பந்தமாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முத்துப்பாண்டியின் மோட்டார்சைக்கிளை வேல்ராணியும், அவரது தங்கை ராஜலெட்சுமியும் அடித்து உடைத்து, சேதப்படுத்தினர். இதுகுறித்து முத்துப்பாண்டியின் மனைவி ராஜம்மாள் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

சம்பவத்தன்று அந்த வழியாக வந்த முத்துபாண்டியின் மகன் சரவணனிடம் (வயது 27) வேல்ராணி, அவரது தங்கை ராஜலெட்சுமி, ராஜலெட்சுமி மகன் அஜெய்செல்வன் ஆகியோர் எங்களை பற்றி எப்படி போலீசில் புகார் செய்யலாம் என்று கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன் தகராறை செல்போனில் படம் எடுத்தார். இதைப்பார்த்த வேல்ராணி உள்பட 3 பேரும் செல்போனை தட்டி விட்டதுடன் சரவணனை கம்பால் தாக்கினர். இதனை தடுக்க சென்ற சரவணனின் தாயார் ராஜம்மாளையும் (50) கீழே தள்ளி தாக்கினர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் காயம் அடைந்த சரவணன், அவரது தாயார் ராஜம்மாள் ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சரவணன் பணகுடி பேரூராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேல்ராணி உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்.

Tags:    

Similar News