அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் ரூ.39.20 லட்சம் காணிக்கை வசூல்
- அவதானப்பட்டி கோவிலில் ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதம் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு அவதானப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களை ஓட்டி செல்லும் டிரைவர்கள் பலரும் இங்கு வாகனங்களை நிறுத்தி சாமியை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், தக்கார் பிரபு, செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் மேற்பார்வையில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 30-க்கும் மேற்பட்டோர் உண்டியல்களை பிரித்து பணத்தை எண்ணினார்கள்.
இது குறித்து அறநிலைய துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அவதானப்பட்டி கோவிலில் ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதம் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதற்கு முன்னதாக கோவில் உண்டியல் திறக்கப்பட்ட காணிக்கைகள் எண்ணப்படும். கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை. தற்போது திருவிழா நடைபெற உள்ளதால், கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதன்படி, உண்டியலில் ரூ-.39 லட்சத்து 19 ஆயிரத்து 976 ரொக்கம், 96 கிராம் தங்கம், 170 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.
உண்டியல் காணிக்கை எண்ணியதை முன்னிட்டு கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில், கிருஷ்ணகிரி அணை போலீஸார் 20 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.