கோவையில் தனியார் நிறுவன வங்கி கணக்கை முடக்கி ரூ. 24.94 லட்சம் நூதன மோசடி
- வாடிக்கையாளர்களுக்கு போலி- இமெயில் அனுப்பி மோசடி செய்துள்ளார்
- கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
கோவை,
கோவை வெள்ளலூர் அசோகர் தெருவை சேர்ந்தவர் வெங்கட் கிருஷ்ணா(வயது51). தனியார் கம்பெனி உரிமையாளர்.
இவர் தானியங்கி தீ பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இவரது கம்பெனிக்கு தமிழகம் மட்டுமின்றி பிறவெளி மாநிலங்களிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்தநிலையில், வெங்கட் கிருஷ்ணா கம்பெனியின் இ-மெயில் முகவரியை முடக்கிய மர்ம நபர், அவரது வாடிக்கையாளர்களுக்கு போலி- இமெயில் அனுப்பி உள்ளார்.
அதில் நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கி வேறொரு வங்கி கணக்கை அனுப்பினார். தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் ரூ. 24.94 லட்சத்தை மர்ம நபர் தனது வங்கி கணக்கிற்கு செலுத்த வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த வெங்கட் கிருஷ்ணா கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் கம்பெனி வங்கி கணக்கை முடக்கி நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.