கோவையில் குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய சகோதரர்கள் கைது
- டாஸ்மாக்கடை அருகே குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
- போலீஸ்காரர் ஒருவர் கண்டித்ததால் அவரையும் தாக்கினர்.
கோவை,
கோவை ரத்தினபுரி போலீசார் சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சங்கனூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே சென்றபோது சில வாலிபர்கள் அங்கு குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறி விட்டு புறப்பட்டு சென்றனர்.
பின்னர் சிறிது நேரத்துக்கு பின் போலீசார் அதே பகுதிக்கு ரோந்து வந்தனர். அப்போது முன்பு நின்றிருந்த அதே வாலிபர்கள் மீண்டும் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
இதனை போலீஸ்காரர் ஒருவர் கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த குடிபோதை ஆசாமிகள் 2 பேர் தகாத வார்த்தைகளால் பேசி அவரை கீழே தள்ளி தாக்கினர்.
இது குறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், குடிபோதையில் போலீசாரை தாக்கியது சிவானந்தா காலனியை சேர்ந்த பெயிண்டர் மணி(27), மற்றும் அவரது தம்பி விஷ்ணு(23), ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.