உள்ளூர் செய்திகள் (District)

பொள்ளாச்சியில் காதல் திருமணம் செய்த பெண்ணை பெற்றோர் கடத்தியதாக புகார்

Published On 2023-11-24 09:30 GMT   |   Update On 2023-11-24 09:30 GMT
  • இளம்பெண் தன்னை யாரும் கடத்தவில்லை என போலீசில் தெரிவித்துள்ளார்.
  • வாலிபர் போலீஸ்நிலையத்தில் கண்கலங்கியபடி நின்றார்.

கோவை,

கோவை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது வாலிபர். கூலி வேலை பார்த்து வருகிறார்.

இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த பெண் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் அவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடியினர் கடந்த 20-ந் தேதி அங்குள்ள விநாயகர் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வாலிபரின் வீட்டுக்கு புதுமண தம்பதி சென்றனர்.

மறுநாள் வாலிபர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் வாலிபரின் தாயாரும், புதுப்பெண்ணும் இருந்தனர். அப்போது பெண்ணின் பெற்றோர் வந்துள்ளனர். அவர்களிடம் அந்த பெண் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வாலிபரின் தாயார் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பெண்ணும், அவரது பெற்றோரும் மாயமாகி இருந்தனர்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த வாலிபர், இளம்பெண் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கோட்டூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் திருமணம் ஆன மறுநாளே எனது மனைவியை அவரது பெற்றோர் கடத்திச் சென்று விட்டதாக கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இளம்பெண்ணையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், தன்னை திருமணம் செய்த வாலிபருடன் வாழ இஷ்டமில்லை என்றும், பெற்றோருடன் செல்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இளம்பெண்ணை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.

இளம்பெண்ணின் முடிவை கேட்டு அவரை திருமணம் செய்த வாலிபர் போலீஸ்நிலையத்தில் கண்கலங்கியபடி நின்றார்.

Tags:    

Similar News