கோவை-சிங்கப்பூர் விமானத்தில் சரக்கு போக்குவரத்து பாதிப்பு
- அதிக கட்டணம் வசூலிப்பது தான் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
- கோவையிலிருந்து ஒரு கிலோ சரக்கு கையாள ரூ.130 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கோவை,
கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் விமான சேவை வழங்கப்படுகிறது.
தினமும் இரவு 7.45 மணியளவில் கோவையில் தரையிறங்கும் விமானம் மீண்டும் 8.45 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும்.
தினமும் பயணிகள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இயக்கப்படும் இந்த விமானத்தில் சரக்குகள் மட்டும் மிக குறைந்த அளவே கையாளப்படுகின்றன.
திருச்சி, கொச்சின் விமான நிலையங்களுடன் ஒப்பிடுகையில் கோவையில் அதிக கட்டணம் வசூலிப்பது தான் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம் என அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது. ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது.
இதில் ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்படும் போதும் வாரம்தோறும் அதிகபட்சமாக 3 டன் ஒரு சில வாரங்களில் அதற்கு குறைவாகவே சரக்குகள் கையாளப்படுகின்றன.
உதாரணமாக கோவையிலிருந்து ஒரு கிலோ சரக்கு கையாள ரூ.130 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்சியில் ரூ.100 மற்றும் கொச்சினில் ரூ.70 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இதனால் திருச்சி மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகளவு சரக்குகள் கையாளப்படுகின்றன.
கோவை விமான நிலையத்தில் சரக்கு கையாளும் அளவை அதிகரிக்கும் நோக்கில் விரைவில் பிரத்யேக அலுவலகத்தை திறக்க தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அலுவலகம் திறக்கப்பட்ட பின் கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு பொறியியல்துறை சார்ந்த மற்றும் உணவு பொருட்கள் உள்ளடக்கிய பல்வேறு சரக்குகள் கையாள தற்போது விதிக்கப்படும் கட்டணத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.