சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
- இறந்த சாலை பணியாளர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட தலைவர் வெங்கடேசன், சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சட்டையப்பன், மத்திய செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சட்ட மன்றத்தில் அறிவிப்போம் என வாக்குறுதி அளித்த தமிழக முதல்வர் அதை அமல்படுத்த வேண்டும்.
இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். 50-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்களை பலி கொண்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7500க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் காலி இடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சாலை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் வட்டத் தலைவர் கருணாகரன் கண்ணன் காமராஜ் கலைவாணன் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொரு–ளாளர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.