உள்ளூர் செய்திகள்

பிரியாணி கடையில் புகுந்து சமையல் மாஸ்டர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை

Published On 2024-07-27 07:05 GMT   |   Update On 2024-07-27 08:27 GMT
  • படுகாயம் அடைந்த முகமது ஆசிக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் கடந்த 6-ம் தேதி புதிதாக பிரியாணி ஓட்டல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் வி.ஜெட்டி அள்ளி பகுதியை சேர்ந்த முகமது ஆசிக் (25) என்பவர் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று இரவு ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இரவு சுமார் 10 மணியளவில் ஓட்டலுக்கு 4 பேர் வந்துள்ளனர். அப்போது அவர்களில் 2 பேர் முகமது ஆசிக்கிடம் பேசுவது போல் நடித்து கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சராமாரியாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்த முகமது ஆசிக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டலில் இருந்த மற்ற ஊழியர்கள் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களையும் கொலையாளிகள் கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் அவர்கள் உயிருக்கு பயந்து விலகி நின்றனர்.

இதை தொடர்ந்து ஓட்டலில் அலரல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த செய்து பார்த்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்ட போலீசார் தனிப்படை அமைத்து தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து கொலையாளிகளை கைது செய்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

தருமபுரி , சேலம் முக்கிய சாலையில் அமைந்துள்ள பிரபல பிரியாணி ஓட்டலில் வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டு இருந்தபோதே இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தருமபுரியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News