உள்ளூர் செய்திகள் (District)

அரசு ஐ.டி.ஐ., யில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி இடங்களுக்கு நேரடி சேர்க்கை

Published On 2022-09-24 10:28 GMT   |   Update On 2022-09-24 10:28 GMT
  • 30-ந் தேதி வரை நடக்கிறது.
  • பயிற்சி கட்டணம் இலவசம்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் உப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கூடலூர் உப்பட்டியில் உள்ள பழங்குடியினருக்கான அரசு ஐ.டி.ஐ., யில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி இடங்களுக்கு நேரடி சேர்க்கை வரும் 30-ந் தேதி வரை நடக்கிறது. தகுதியான பழங்குடியின மாணவ, மாணவிகள் மற்றும் இதர பிரிவு மாணவ, மாணவிகள் (பொதுப்பிரிவினரை தவிர) அரசு விதிமுறைகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி பிட்டர், கம்மியர் மோட்டார் வண்டி ஆகிய 2 ஆண்டு தொழிற் பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், ஒயர்மேன், பிளம்பர், வெல்டர் ஆகிய பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து பெறப்பட்ட மதிப்பெண் சான்று மற்றும் இதர சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். மதிப்பெண் அடிப்படையிலும் அரசு விதிகளின் படி கலந்தாய்வு சேர்க்கையின் மூலம் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சி கட்டணம் இலவசம். அனைத்து மாணவர்களுக்கும் ரூ.750 வீதம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி உள்ளது. பயிற்சியின் முடிவில் தேசிய தொழிற் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு உப்பட்டி ஐ.டி.ஐ., முதல்வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News