உள்ளூர் செய்திகள்

தி.மு.க.-பா.ஜனதாவினர் மோதல் 3 பேர் மீது வழக்கு

Published On 2022-06-20 09:06 GMT   |   Update On 2022-06-20 09:06 GMT
தி.மு.க.-பா.ஜனதாவினர் மோதல் இரு தரப்பை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சேலம்:

சேலம் சிவதாபுரம் 22-வது வார்டில் தி.மு.க. வார்டு செயலாளராக இருப்பவர் திருஞானம் (வயது 34).

ரூ.3 ஆயிரம் உதவி தொகை

இவர் தலைமையில் கடந்த வாரம் ஒரு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில் பிரதம மந்திரி அமைப்பு சாரா தொழிலாளர் திட்டத்தில் மாதம் ரூ.3 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் எனக்கூறி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவற்றுடன் 300 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா மண்டல செயலாளர் கார்த்திக் (28), தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல தலைவர் ராகுல் (20) இருவரும் விளக்கம் கேட்டனர். அதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே நேற்று இரு தரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டனர். இதில் கார்த்திக், ராகுல் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து நேற்றிரவு பா.ஜனதாவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டவுன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

3 பேர் மீது வழக்கு

இது குறித்து விசாரணை நடத்திய கொண்டலாம்பட்டி போலீசார் தி.மு.க.வை சேர்ந்த திருஞானம், பா.ஜனதாவை சேர்ந்த ராகுல், கார்த்திக் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News