உள்ளூர் செய்திகள்

இ-ஆபீஸ் திட்ட செயல்பாடு - திருப்பூர் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்

Published On 2023-01-31 08:13 GMT   |   Update On 2023-01-31 08:13 GMT
  • கடிதம் அனுப்புதல், கடிதம் பெறப்பட்டதை உறுதி செய்தல் என அனைத்தும் இ-ஆபீஸ் மூலமாக நடக்கிறது.
  • பழைய கோப்புகளை முடித்துவிட்டு புதிதாக இ-ஆபீஸ் மூலம் கோப்புகள் தயாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர்:

தமிழக அரசு காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் இ-ஆபீஸ் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி அரசு அலுவலகங்களில் காகித கடித போக்குவரத்து டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. முதல்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் இ-ஆபீஸ் திட்டத்தில் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இ-ஆபீஸ் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி பதிவறை எழுத்தரில் துவங்கி கலெக்டர் வரை அனைவரும் இ-ஆபீஸ் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இதன் மூலம் காகித செலவும் நேரவிரயமும் வெகுவாக குறைந்துள்ளது.

இ-ஆபீஸ் திட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.இத்திட்டம் தொடர்பாகவும் ஆன்லைன் தகவல் பரிமாற்றம் தொடர்பான சந்தேகங்களுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மின்னாளுமை திட்ட முகமை அலுவலர்கள் சம்பத் மற்றும் முத்துக்குமார் அரசு அலுவலர்களுக்கு இ-ஆபீஸ் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இது குறித்து மின்னாளுமை முகமை அலுவலர்கள் கூறியதாவது:- கடந்த 6 மாதமாக வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் அனைத்து வகை கடித போக்குவரத்தும் இ-ஆபீஸ் மூலம் நடக்கிறது.

கடிதம் தயாரித்தல், முதல் நிலை ஒப்புதல், உயர் அதிகாரி ஒப்புதல் அளித்தல், கடிதம் அனுப்புதல், கடிதம் பெறப்பட்டதை உறுதி செய்தல் என அனைத்தும் இ-ஆபீஸ் மூலமாக நடக்கிறது.

இ-ஆபீஸ் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வதில் தென்காசி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக திருப்பூர் மாவட்டம் மூன்றாமிடத்தில் உள்ளது. குறிப்பாக இ-ஆபீஸ் பயன்படுத்தும் கலெக்டர்கள் வரிசையிலும் திருப்பூர் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 7,000 கோப்புகள் இ-ஆபீஸ் மூலம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்க ப்பட்டுள்ளன. பழைய கோப்புகளை முடித்துவிட்டு புதிதாக இ-ஆபீஸ் மூலம் கோப்புகள் தயாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாவட்டத்தில் இதுவரை 7,000 கோப்புகள் இ-ஆபீஸ் மூலம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. பழைய கோப்புகளை முடித்துவிட்டு புதிதாக இ-ஆபீஸ் மூலம் கோப்புகள் தயாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News