கோவையில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 8 பேர் கைது
- சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கல்லிமேடு பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.
- 8 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை,
கோவை இடையர்பாளையம் கல்லிமேடு பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கல்லிமேடு பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் சூலூர் பாப்பம் பட்டியை சேர்ந்த திருமால்சாமி (வயது 53) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மேட்டுப்பாளையம், கே.ஜி சாவடி, கோமங்களம், சூலூர் மற்றும் அன்னூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக கார்த்திக் (22), ஸ்டீபன்ராஜ் (21), முகமது ரபிக் (18), நந்தலால் (43), அஜித்குமார் (22), அரவிந் (21), மனோகரன் (51) ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 8 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.