நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் வாகனம் மோதி மின்கம்பம் முறிந்தது - பெரும் விபத்து தவிர்ப்பு
- ஈரடுக்கு மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
- அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஈரடுக்கு மேம்பாலத்தில் இடதுபுற தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு மற்றும் டவுன் பகுதியை இணைக்கும் முக்கிய பாலமான நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இந்த மேம்பாலத்தில் அவ்வப்போது வாகன விபத்துக்கள் ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழல் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த வழியாக டவுனில் இருந்து சந்திப்பு பகுதியை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஈரடுக்கு மேம்பாலத்தில் இடதுபுற தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பக்க வாட்டு சுவரில் பொருத்தி இருந்த மின்கம்பம் இடது புறமாக உள்ள கட்டி டத்தின் மீது முறிந்து விழுந்தது. மேலும் அந்த பகுதியில் நடப்பட்டிருந்த கொடி கம்பங்களும் முறிந்து விழுந்தன.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நெல்லை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து ஆய்வு நடத்தினர். மோதிவிட்டு நிற்காமல் சென்றது கனரக லாரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தின் போது மின் கம்பம் கட்டிடத்தின் மீது விழுந்துவிட்டது. அதிர்ஷ்ட வசமாக சாலையில் முறிந்து விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.