தூத்துக்குடி கிரீன்ஸ்டார் பெர்டிலைசர் நிறுவனத்தில் அம்மோனியா இறக்குமதி முனையத்தில் அவசர கால ஒத்திகை
- அம்மோனியா இறக்குமதி முனையத்தில் அவசரகால ஒத்திகை
- அம்மோனியா கசிந்தால் அதனை எவ்வாறு தடுப்பது?
தூத்துக்குடி:
தூத்துக்குடி கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் அம்மோனியா இறக்குமதி முனையத்தில் அவசரகால ஒத்திகை தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குநர் நிறைமதி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் டி-401 அம்மோனியா சேமிப்பு கொள்கலனிலிருந்து வெளிவரும் குழாயில் அம்மோனியா கசிந்தால் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது.
இதை கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் அம்மோனியா இறக்குமதி முனையத்தின் துறைத்தலைவர் சிக்கந்தர்பாஷா அம்மோனியா கசிவை கட்டுப்படுத்த தனது குழுவிற்கு ஆலோசனை வழங்கினார்.
அவரது அறிவுரையின்படி தொழிற்சாலை ஊழியர்கள் பாதுகாப்பு சாதனங்களை அணிந்து கொண்டு அம்மோனியா கசிவினை தடுத்து நிறுத்தும் ஒத்திகையை செய்து காண்பித்தனர்.
பின்னர் சுற்றுசூழல் நிலை சரிபார்க்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி முடித்துக்கொள்ளப்பட்டது. இதில் கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஒத்திகைக்கு தூத்துக்குடி துறைமுக தீ அணைப்பு வீரர்களும், டி.சி.டபிள்யூ. நிறுவன அதிகாரிகளும் வந்திருந்தனர். பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் தலைவர் ரவிச்சந்திரன் ஒத்தகை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
அவசரகால ஒத்திகை முடித்தபின் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் இணை இயக்குனரான நிறைமதி ஒத்திகையை நடத்திய அனைவரையும் பாராட்டினார். மேலும் ஒத்திகையை சிறப்பாக நடத்த கருத்துகளையும் தெரிவித்தார்.